திருச்சி: திருச்சி அருகே திருமணமாகி 50 நாட்களே ஆன இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வாழவந்திபுரத்தை சேர்ந்த அருள்ராஜின் மனைவி கிறிஸ்டியன் ஹெலன் ராணி என்பவர் இன்று அதிகாலை 3 மணியளவில் இயற்கை உபாதைக்காக கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அருள்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் ஹெலன் ராணியை தேடி சென்றுள்ளனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் குட்டைபோல தேங்கி இருந்த தண்ணீரில் ஹெலன் ராணியின் உடல் நிர்வாண நிலையில், மிதந்து கொண்டிருந்தது.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் தலைமையில் காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதன் பின்னர், முதற்கட்ட விசாரணையில் இளம்பெண் ஹெலன் ராணி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் கொலை குறித்த விசாரணையை போலீசார் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அதாவது இளம்பெண் அணிந்திருந்த தங்க செயின், கம்மல் உள்பட 5 பவுன் நகைகள் திருட்டு போயுள்ளது.
இதனால் நள்ளிரவில் இயற்கை உபாதை கழிக்க சென்ற ஹெலன் ராணியை மர்மநபர்கள் கற்பழித்து கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, ஹெலன் ராணியின் கணவர் அருள்ராஜிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 50 நாட்களே ஆன நிலையில் இளம்பெண் ஹெலன் ராணி கொலை செய்யப்பட்டிருப்பது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.