தமிழ்நாட்டில் 2 லட்சம் தரமற்ற பொறியியல் பட்டதாரிகள் உருவாகும் நிலை! - தமிழக அரசின் அறிவிப்பு குறித்து கல்வியாளர்கள் எச்சரிக்கை...!!!

சென்னை:  அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டதன் மூலம் 2 லட்சம் தரமற்ற பொறியியல் பட்டதாரிகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது 4 லட்சத்துக்கும் அதிகமான பொறியியல் மாணவர்கள் அரியர் வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இவர்களில் 2 லட்சம் பேர் இறுதி தேர்வை மட்டும் எழுதிவிட்டு பொறியியல் பட்டம் பெற இருக்கின்றனர். மேலும் பல மாணவர்கள் 10க்கு மேற்பட்ட பாடங்களில் அரியர் வைத்துள்ளனர். அதிலும் பெரும்பாலான பாடங்களில் மாணவர்கள் 20 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்த நிலையில், தேர்வு கட்டணத்தை மட்டும் செலுத்தியதால், இந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட உள்ளது.

இதனால் தரமற்ற பொறியியல் பட்டதாரிகள் உருவாகும் நிலை ஏற்படும் என்றும், இதுபோன்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் பெரிதளவு பாதிப்பு ஏற்படும் என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதேபோல அரியர் மாணவர்களை நேரடியாக தேர்ச்சிப் பெற வைக்கும் நடவடிக்கை பல்கலைக்கழகத்தின் தரத்தை குறைப்பது மட்டுமல்லாமல், அதன் நம்பகத்தன்மையையும் மோசமாக பாதிக்கும் என்பதும் கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. யூ.ஜி.சி., வழிகாட்டுதல் மற்றும் அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர, அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும் அரியர் வைத்திருந்த மாணவர்கள் தேர்வுக்கு கட்டணம் செலுத்தி இருந்தால், அவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: