சென்னை: சென்னை அருகே அதானி துறைமுக விரிவாக்கத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மீனவர்கள் STOP ADVANI, SAVE PULICAT என்ற வாசகங்கள் அடங்கிய முகக்கவசம் அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த துறைமுகத்தை காட்டுப்பள்ளியிலிருந்து பழவேற்காடு வரை சுமார் 20 கி.மீ தூரம் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து அதானி விரிவாக்க பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இத்திட்டத்தை கைவிடக்கோரி, பழவேற்காடு மீனவர்கள் கடந்த ஓராண்டாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் அடுத்தகட்டமாக, அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி STOP ADVANI, SAVE PULICAT என்ற வாசகங்கள் எழுதப்பட்ட முககவசங்களை அணிந்து மீனவர்கள் நூதன முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அதாவது துறைமுக விரிவாக்கத்தால், கடல் வாழ் இனங்கள் அழியும் நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அதிகளவு மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் சீர்குலைந்துவிடுமென்று மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென்று மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.