கீழ்வேளூர் மதிவாணன், சீர்காழி பாரதி மேலும் 2 எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி

சென்னை: நாகையில், கீழ்வேளூர் எம்எல்ஏ மதிவாணனுக்கும், சீர்காழி எம்எல்ஏ பாரதிக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4 எம்.பி.க்கள், 4 அமைச்சர்கள், 33 எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று, மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாகை மாவட்டம் கீழ்வேளுர் தொகுதி எம்எல்ஏ மதிவாணன் (63). தி.மு.க.வை சேர்ந்த இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதன் அறிக்கை நேற்று முன்தினம் வந்தது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நலமுடன் உள்ளார்.

இதேபோல், நாகை மாவட்டம் சீர்காழி தொகுதி அதிமுக எம்எல்ஏ பாரதி (62), திருவெண்காட்டில் வசித்து வருகிறார். நாகப்பட்டினத்தில் முதல்வர் தலைமையில் நடைபெறும் கொரோனா பாதிப்பு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பாரதி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: