வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே பாடியூர் இ.புதூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (25). விவசாயி. இவரது உறவினர்கள் பழனிவேல், வேல்முருகன். இருவருக்கும் நில பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. சிவசுப்பிரமணியன் இரு தரப்பினரையும் நேற்று அழைத்து பஞ்சாயத்து பேசினார்.அப்போது சிவசுப்பிரமணியனுக்கும், வேல்முருகன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த சிவசுப்பிரமணியன், வேல்முருகன் தரப்பை சேர்ந்த மாரிமுத்து (62) என்பவரின் இடது காதை கடித்து துப்பினார். இதில் காதின் ஒரு பகுதி துண்டானது. ஆத்திரமடைந்த வேல்முருகன், ‘எங்க ஆளோட காதையே கடிச்சு துப்பிட்டியா. உன்னை என்ன பண்றேன் பாரு’ என்று சிவசுப்பிரமணியனின் மீது பாய்ந்து, அவரது காதை கடித்து கீழே துப்பினார். இதில் சிவசுப்பிரமணியன் காதும் துண்டானது.