புளியந்தோப்பு சரகத்தில் ஒரே நாளில் 7 ரவுடிகள் கைது: துணை கமிஷனர் அதிரடி

பெரம்பூர்: புளியந்தோப்பு காவல் சரகத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி, எம்கேபி நகர், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் கடந்த 4 மாதங்களில் 4 கொலைகள் நடைபெற்றுள்ளன. மேலும் அடிதடி மற்றும் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் நடந்தன. இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த திங்கள்கிழமை விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, புளியந்தோப்பு காவல் சரக துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா அந்தந்த காவல் நிலையங்களில் ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து அவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்பேரில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய காமேஷ் (40), இட்டா அஜித் (24), ஆசைத்தம்பி (37), ஓலை சுரேஷ் மற்றும் நாகராஜ், சுரேஷ்குமார், ஜோசப் ஆகிய ரவுடிகளை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒவ்வொரு ரவுடிகள் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. பலர் தேடப்பட்டு வரும் ரவுடிகளாகவும் உள்ளனர். இதேபோல மேலும் பல ரவுடிகளின் பட்டியலை தயாரித்து நடவடிக்கை எடுக்கவும் துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். தெருத் தெருவதாக ரவுடிகளின் வேட்டை தொடருவதால், பலர் வடசென்னையை காலி செய்து விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

Related Stories: