சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, நடிகை தமன்னா மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டதிற்கு அடிமையாகி சூதாட்டம் விளையாடி வந்த சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவன் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சூரியபிரகாசம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், இளைஞர்களை கவரும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில், கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, நடிகை தமன்னா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இதை விளையாடிய இளைஞர்கள் பல காரணங்களால் தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே, இந்த சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்கவேண்டும், இணையதளங்களைமுடக்க வேண்டும், இந்த சூதாட்டத்துக்கான விளம்பரங்களில் நடித்த விராத் கோஹ்லி, தமன்னா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்யவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசுகள் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.