பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி 7 மணிமுதல் மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக கன மழை பெய்யத் தொடங்கியது. சூறைக் காற்று, இடியுடன் பெய்த மழை இரவு 11மணிவரை விட்டுவிட்டு பெய்து கொட்டித் தீர்த்தது. இதனால் செட்டிக்குளம் 43மிமீ, பாடாலூர் 17மிமீ, பெரம்பலூர் 97மிமீ, கிருஷ்ணாபுரம் 23மிமீ, தழுதாழை 27மிமீ, வி.களத்தூர் 2மிமீ, வேப்பந்தட்டை 110மிமீ என பெரம்பலூர் மாவட்ட அளவில் மொத்தம் 319மிமீ மழைபெய்தது. அகரம் சீகூர், லெப்பைக்குடிகாடு, புதுவேட்டக்குடி ஆகிய இடங்களில் மழை அளவு பதிவாகவில்லை. மாவட்டத்தின் சராசரி மழையளவு 29மிமீ ஆகும்.இந்நிலையில் எதிர்பார்க்காத அளவுக்கு பெரம்பலூரில் கனமழை கொட்டித் தீர்த்ததால் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் பல இடங்களில் மேன்ஹோல் வழியாக பொங்கி தெருக்களில் துர் நாற்றத்துடன் கழிவுநீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சற்று பள்ளமாக உள்ள 7வது வார்டு பாரதிநகரில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவுநீர் உள்ளே புகுந்தது. அரையடி உயரத்திற்கு மேல் கழிவுநீர் வீடுகளில் புகுந்ததால் நகராட்சி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது.