சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரண்டு ஆம்னி பேருந்துகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு என தனியாக பேருந்து நிலையம் இருக்கிறது. அப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோயம்பேடு, கோடம்பாக்கம், அண்ணாநகர், திருமங்கலம் ஆகிய பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்திருக்கின்றன. தொடர்ந்து, மூன்று தனியார் பேருந்துகள் கொழுந்துவிட்டு எரிந்ததை கண்ட தீயணைப்பு வீரர்கள் அதனை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 3 வாகனங்கள் முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளது. குறிப்பாக ஸ்லீப்பர் கோச் எனப்படும் ஏசி உள்ள வாகனங்களே தீப்பற்றியுள்ளன. அதோடு மேலும் 2 வாகனங்கள் ஒருபகுதி அளவுக்கு சேதமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆம்னி பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே குடியிருப்பு பகுதிகள் இருக்கின்றன. அப்பகுதியில் உள்ள சுவர் பகுதியிலும் தீப்பற்றியுள்ளது.