சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீ விபத்து!: 5 ஆம்னி பேருந்துகள் தீப்பற்றியதால் பரபரப்பு..விபத்து குறித்து போலீசார் விசாரணை..!!

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரண்டு ஆம்னி பேருந்துகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு என தனியாக பேருந்து நிலையம் இருக்கிறது. அப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோயம்பேடு, கோடம்பாக்கம், அண்ணாநகர், திருமங்கலம் ஆகிய பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்திருக்கின்றன. தொடர்ந்து, மூன்று தனியார் பேருந்துகள் கொழுந்துவிட்டு எரிந்ததை கண்ட தீயணைப்பு வீரர்கள் அதனை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 3 வாகனங்கள் முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளது. குறிப்பாக ஸ்லீப்பர் கோச் எனப்படும் ஏசி உள்ள வாகனங்களே தீப்பற்றியுள்ளன. அதோடு மேலும் 2 வாகனங்கள் ஒருபகுதி அளவுக்கு சேதமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆம்னி பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே குடியிருப்பு பகுதிகள் இருக்கின்றன. அப்பகுதியில் உள்ள சுவர் பகுதியிலும் தீப்பற்றியுள்ளது.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்ததால் குடியிருப்பு பகுதி முழுவதும் தீயானது பரவாமல் தடுக்க பட்டிருக்கிறது. தொடர்ந்து பேருந்தின் உள்ளிருக்கும் எலக்ட்ரானிக் உபகரணங்கள், பேருந்தில் பயன்படுத்தும் கேஸ்சுகள் ஆகியவற்றை பத்திரமாக அப்புறப்படும் பணியில் தீயணைப்புவீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில் இந்த பேருந்து நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் அப்பகுதியில் சிலர் கஞ்சா போன்றவற்றை பயன்படுத்துவதாகவும், அதில் எவரேனும் சிலர் சிகரெட் துண்டுகளை வீசி சென்றிருக்கலாம் எனவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இது பேருந்திற்காக இன்சூரன்ஸ் பிரச்சனைக்காக கொளுத்திவிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தொடர்ந்து இருவேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: