சென்னை: பணியில் கடந்த 2002ம் ஆண்டுக்கு முன்னர் சேர்ந்துள்ள கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்காததால் கவுரவமான ஓய்வாக கருத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடாசலபதி பதிவாளர் எல்.சுப்ரமணியத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 2002 டிசம்பருக்கு முன்பாக பணிக்கு சேர்ந்துள்ள அரசு ஊழியர்களுக்கு துறை ரீதியான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டுக்கு முன்னர் பணிக்கு சேர்ந்துள்ள கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்காததினால், சமூகத்தில் கவுரவமான ஓய்வாக கருத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.