ஈரோடு: ஈரோடு கலெக்டருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இதனால், நேற்றுமுன்தினம் விழாவில் அவருடன் பங்கேற்ற அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோருக்கு கலக்கத்தை உண்டாக்கி உள்ளது.ஈரோடு கலெக்டர் கதிரவனுக்கு கடந்த 2 நாட்களாக லேசான உடல் வலி இருந்து வந்தது. சந்தேகத்தின்பேரில், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். நேற்று வெளியான முடிவில் கதிரவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனது வீட்டிலேயே கலெக்டர் கதிரவன் தனிமைப்படுத்திக்கொண்டார். கலெக்டர் கதிரவன் நேற்று முன்தினம் மொடக்குறிச்சி அருகே நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார்.