உலக நாடுகளே கொரோனாவால் திணறும்போது விநாயகர் சதுர்த்தி விழா நடத்த உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கிளை அதிரடி

சென்னை: விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது மற்றும் ஊர்வலம் நடத்த தடை விதித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, வழக்கறிஞர் ராமசாமி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தமிழக அரசு கொள்கைரீதியான முடிவெடுத்து, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த தடை விதித்துள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. உலக நாடுகளே கொரோனா தொற்றை சமாளிக்க திணறுகிறது. இந்நிலையில், இதுபோன்ற விழாக்களை அனுமதிப்பது எவ்வாறு சாத்தியம்” என கேள்வி எழுப்பினர். பின்னர், “விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யமுடியாது’’ என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

* தளர்வுக்கு வாய்ப்பு...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அரசு தடைவிதித்ததை எதிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இல.கணபதி, சென்னை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் எம்.எம் சுந்தரஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு விநாயகர் சதுர்த்தி மக்களின் உணர்வுபூர்வமான விஷயமாக இருப்பதால் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதா, சிலை வைத்து வழிபட்ட பின் 5, 6 பேருக்கு மிகாமல் பேரிடர் விதிகளை பின்பற்றி பொதுமக்கள் பெரிய கோயில்கள் அருகில் கொண்டு வைத்து விடுவது, அல்லது சொந்தமாக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கடற்கரையில் வைத்து விடுவது போன்றவற்றை அனுமதிக்க சாத்தியக்கூறு உள்ளதா, சிலைகளை தயாரித்துள்ளவர்களும் பாதிக்கப்படுவர். எனவே, அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிப்பதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: