சென்னை: பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பூரண நலம்பெற்று பழையபடி வலம் வர வேண்டும் என்று அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். தனது அற்புத குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் தனக்கான தனி இடம் பிடித்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை வேண்டுவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தேமதுரக் குரலோசை மீண்டும் வெள்ளித்திரை வானில் ஒலித்திட எஸ்.பி.பி. மீண்டு வர வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதனை போலவே, கொடிய கொரோனாவில் இருந்து மீண்டு வந்து எஸ்.பி.பி. மீண்டும் பாடுவார் என்று இயக்குனரும், நடிகருமான மனோபாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.