சென்னை : இ-பாஸ் நடைமுறையால் கல்லூரி சேர்க்கை பணிகளுக்காக செல்லும் மாணவர்கள் சிரமம் அனுபவிக்கிறார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 7வது கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.ஊரடங்கு விதிகளின்படி, தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு தனியார் வாகனங்கள் இ- பாஸ் பெறுவது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவசர தேவைக்காக பாஸ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இ - பாஸ் கிடைப்பதில்லை என்றும் அதே சமயம்,சில ஏஜெண்டுகளிடம் 3000 ரூபாய் பணம் கொடுத்தால் அரை மணி நேரத்தில் பாஸ் தயாராகி விடுவதாகவும் புகார்கள் எழுகின்றன. இந்த புகார்களை தொடர்ந்து இ - பாஸ் நடைமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.