தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன்பாக பேருந்து சேவை தொடங்க வாய்ப்பு இல்லை : அரசு வட்டாரங்கள் தகவல்!!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன்பாக பேருந்து சேவை தொடங்க வாய்ப்பு இல்லை என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் கடந்த ஜூன் 24ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, ஜூன் மாதத்தில் பொது போக்குவரத்து பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டது. என்றாலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் பிற மாவட்டங்களைத் தொடர்ந்து கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்ததால் ஜூன் 24ம் தேதி முதல், ஆகஸ்ட் 31ம் தேதி வரை பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. சென்னையில் கொரோனா தொற்று பரவல் சற்று குறைவாக இருந்தாலும் கோவை, தேனி, கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நாள்தோறும் 35% பேருக்கு புதிதாக தொற்று ஏற்படுகிறது. இதனால் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன்பாக பேருந்து சேவைகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்பது உறுதியாகி உள்ளது.

கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து இருப்பதால் பேருந்து சேவையை தொடங்குவதில் தமிழக அரசு அவசரம் காட்டாது என்று உய அதிகாரிகள் கூறியுள்ளனர். ரயில் சேவை பொறுத்தவரை, ‘மறுஉத்தரவு வரும் வரை நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து நீடிக்கும். அதே சமயம், தற்போது இயக்கப்படும் 230 சிறப்புகள் ரயில்கள் தொடர்ந்து ஓடும்’ என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Stories: