ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை கொண்டுவர நடவடிக்கை: வெளியுறவுத்துறை அமைச்சரிடம் டி.ஆர்.பாலு நேரில் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்தித்து,  ரஷ்ய நாட்டில் உயிரிழந்த, தமிழகத்தை சேர்ந்த நான்கு மருத்துவ மாணவர்களின் உடல்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டுவர ஆவன செய்ய வேண்டுமென கடிதத்தின் மூலம் வலியுறுத்தினார். டி.ஆர்.பாலு எழுதிய மற்றுமொரு கடிதத்தில், “சென்னை கொளுத்துவஞ்சேரியைச் சேர்ந்த ஆர்.சந்தோஷ் குமார், மலேசியாவில் நுழைவு விசா முடிவுற்ற காரணத்தால், கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தாயகம் திரும்ப ஆவன செய்ய வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழக மருத்துவ மாணவர்களின், உடல்களை, உடனடியாக தமிழகத்திற்கு கொண்டுவர ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ஆவன செய்வதாகவும், ஆர்.சந்தோஷ் குமார் மலேசியாவிலிருந்து தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டி.ஆர்.பாலுவிடம் உறுதி அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, திமுக எம்.பி டி.ஆர்.பாலுவை தொடர்புகொண்ட ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகத்தினர், இறந்த மாணவர்களுக்கு உடற்கூராய்வு, எம்பாமிங் சான்றிதழ், கோவிட்-19 பரிசோதனை ஆகியவை செய்தபின், விமான சேவையைப் பொறுத்து இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் இறந்த மாணவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதாக பதிலளித்துள்ளனர்.

Related Stories: