சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க 4 மண்டலங்களில் கூடுதலாக பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் சென்னையில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து சென்ற நிலையில், தற்போது தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது. குறிப்பாக வட சென்னையில்தான் கொரோனா தொற்றானது அதிகளவில் பரவி வந்தது. இதனையடுத்து வடசென்னையில் பல்வேறு தடுப்புகள் அமைத்து, பரிசோதனை முகாம்கள் அமைத்து தொற்றானது தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கு மாறாக தற்போது சென்னை அம்பத்தூர் மண்டலத்தில் 1619 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 1214 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1433 பேரும் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்தில் 781 பேரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.