சென்னை: கொரோனா தொற்று காரணமாக, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை பெண் ஊழியர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு முன், வேறு யாரும் கொரோனா தொற்றால் இங்கு உயிரிழக்கவில்லை.
ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில், டாக்டர், நர்ஸ், லேப் டெக்னீஷியன், வார்டு பாய் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால், தனிமைப்படுத்தல், தகுந்த சிகிச்சை முறைகள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இவர்கள் அனைவரும் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில், ஆவடியை சேர்ந்த 54 வயது பெண் ஸ்டான்லி மருத்துவமனையில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர் மற்றும் நர்ஸ் அவருக்கு தகுந்த சிகிச்சைகள் அளித்து வந்தனர். நேற்று காலை சிகிச்சை பலனின்றி எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்தார். இதுவரை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் என யாரும் கொரோனா தொற்று காரணமாக இறந்தது கிடையாது. முதல்முறையாக நேற்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியர் இறந்த சம்பவம் ஸ்டான்லி மருத்துவமனை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.