சென்னை: 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் இரண்டு மணி நேரம் டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் சார்பில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் செயல்படும் பல்வேறு சங்க நிர்வாகிகளின் கூட்டம் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் முன்களப்பணியாளர்களுக்காக அறிவிக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களை சேர்க்க வேண்டும்.