ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் ஏற்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு.!!!

ஹைதராபாத்: ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் ஏற்படுத்தும் திட்டத்திற்கு வரும் 16ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவிலேயே, முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 2,250 வழங்கும் திட்டத்திற்கான அரசாணையில் கையெழுத்திட்டு மக்களை மகிழ்ச்சியை அடைய செய்தார். மேலும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களையும் வளர்ச்சி பெற செய்யும் வகையில் மூன்று தலைநகரங்கள் ஏற்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டது. இதற்காக மக்களிடம் கருத்துக்கள் கேட்டு பெறப்பட்டன. அதன்படி கர்னூல் நீதிமன்ற தலைநகராகுவும், விசாகப்பட்டினம் ஆட்சி தலைநகராகவும், அமராவதி சட்டசபை தலைநகராகவும் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த மூன்று தலைநகர் அமைக்கும் திட்டத்திற்கு வரும் 16-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

நேரடியாக பங்கேற்று சிறப்பிக்க முடியாத நிலையில் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாகவாவது பங்கேற்க வேண்டும் என்று அதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார். அதே நாளில் ஆந்திராவில் வாழும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்குமாறு பிரதமரை ஜெகன்மோகன் ரெட்டி கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories: