கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கியவர்களை தொடர்ந்து தேடும் பணிகள் தீவிரம்...!!!

திருவனந்தபுரம்:  கேரளாவில் மூணாறு பகுதியில் நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியானது தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நிலச்சரிவில் சிக்கிய 43 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் எஞ்சிய 27 பேரின் நிலைமை என்ன? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாகவே இடுக்கி, வயநாடு, கோட்டயம், மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு முடங்கியுள்ளது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மூணாறு பகுதியில் உள்ள கண்ணன் தேயிலை தோட்டத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்புகள் மற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் என அனைவரும் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். இதனையடுத்து அங்கு பணிபுரிந்து வருபவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாவர். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 70 பேர் சிக்கியுள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து 2 நாட்களாக தேடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முதல் நாள் 26 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் சுமார் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது 3வது நாளாக இன்றும், மண்ணில் புதையுண்டுள்ள மேலும் 27 பேரை தேடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்பு பணியானது இன்று காலை முதலே தொடங்கி சுமார் 3 மணி நேரமாக தேடப்பட்டு வரும் நிலையில், இதுவரை யாரும் மீட்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் உடல்கள் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டு ஆற்றின் கரையோரங்களில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மீட்பு படையினர் சிலர் ஆற்றின் கரையோரங்களில் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories: