மஞ்சூர்: மஞ்சூர் தங்காடு சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைதுறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கன மழையுடன் பலத்த சூறாவளி காற்றும் வீசியதால் மஞ்சூர் சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் ராட்சத மரங்கள் விழுந்தது. பெரும்பாலான மரங்களும் சாலைகள் மற்றும் மின் கம்பங்கள் மீது விழுந்ததால் மின் விநியோகம், போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது. இதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் கம்ப்ரஸர், ஜே.சி.பி. பவர் ஷா உள்ளிட்ட இயந்திரங்களின் உதவியோடு சாலைகளில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். மஞ்சூர் - தங்காடு சாலையில் 30க்கும் மேற்பட்ட ராட்சத கற்பூற மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் வாகன போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்து போனது.