ஏற்காடு: ஏற்காட்டில் அரிய வகையான மண்டையோட்டு பருந்து அந்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காட்டை சேர்ந்த அறிவியல் எழுத்தாளர் இளங்கோ, இதுவரை 300க்கும் மேற்பட்ட அந்துப்பூச்சிகள் இருப்பதை படம் எடுத்து ஆவணப்படுத்தியுள்ளார். உலகில் மிகப்பெரிய அட்லஸ் அந்துப்பூச்சி, நிலா பட்டாம்பூச்சி, ஆந்தைக்கண் பட்டாம்பூச்சி உள்ளிட்டவற்றை படம் எடுத்து பதிவு செய்துள்ளார். தற்போது மண்டையோட்டு பருந்து அந்துப்பூச்சி ஒன்றை, ஏற்காடு ஜேவியர் காட்டேஜ் பகுதியில் கண்டுபிடித்துள்ளார். இது குறித்து இளங்கோ கூறியதாவது: இந்த வகையான அந்துப்பூச்சிகள் உலகில் 3 வகைகள் மட்டுமே உள்ளன. இதன் முதுகுப்புறத்தில் மனித மண்டை ஓடு அடையாளம் காணப்படுகிறது. இது இரவில் மட்டும் பறக்கும். 7 முதல் 14 நாட்கள் மட்டுமே உயிர் வாழும் பூச்சி என்பதால், இதை எளிதில் காண முடியாது. இந்த அந்துப்பூச்சியை ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் கெட்ட சகுனமாக பார்க்கின்றனர். இதனால், இந்த பூச்சியை மரணத்தின் தலை அந்துப்பூச்சி என அழைக்கின்றனர். இது பெரிய அந்துப்பூச்சி. விமானம் போல் நீண்ட தூரம் பறக்கும். இறக்கையை விரித்த நிலையில் 12 செ.மீ நீளத்தைக் கொண்டுள்ளது. பகட்டான நிறத்தில் தோற்றம் அளிக்கும்.