கூடுவாஞ்சேரி: நந்திவரம் ராஜீவ்காந்தி நகரில் 22 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, வண்டலூர் தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வண்டலூர் தாசில்தார் செந்திலிடம் நேற்று மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகா, நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகரில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 22 ஆண்டுகளாக வசிக்கின்றனர். இங்குள்ள அனைவருக்கும் வீட்டு வரி, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, மின்சார அட்டை உள்பட பல்வேறு ஆவணங்கள் உள்ளன. ஆனால், இலவச வீட்டுமனை பட்டா இதுவரை வழங்கவில்லை.