சென்னை: வெப்பச் சலனம் காரணமாக வளி மண்டலமேல் அடுக்கில் உருவான காற்று சுழற்சி மேலும் வலுப்பெற்று வந்ததால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதையடுத்து வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. அத்துடன் தென்மேற்கு பருவக் காற்றின் மலைச் சரிவு மழைப்பொழிவு காரணமாக நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்யும். தேனி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும். இதுதவிர திருவள்ளூர், வேலூர்,கிருஷ்ணகிரி, திண்டுக்கல்,திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மேலும், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை இன்று இரவு 11.30 மணி வரை கடல் அலையானது 3.1 மீட்டர் முதல் 3.7 மீட்டர் வரை எழும்பும்.