ராமர் கோயில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற முதல்வர் வாழ்த்து

சென்னை: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட 5ம் தேதி(இன்று) பூமி பூஜை சிறப்பாக நடக்க எனது சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். 1992 நவம்பர் 23ம் தேதியன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா ‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்’  என்று வலியுறுத்திப் பேசினார். அதே சமயம், மசூதியும் அயோத்தியில் இருக்க  வேண்டும் என விரும்பினார்.

இதன்மூலம், தேசிய ஒற்றுமைக்காகவும், நாட்டின் நன்மைக்காகவும், இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமையை அவர் விரும்பினார் என்பது தெளிவாகிறது. மத்திய அரசு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற இந்து மக்களின் கனவை நனவாக்கும் வகையில், ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Related Stories: