சென்னை: சென்னை மாநகரில் உள்ள 54 இடங்களுக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டு மேலும் 10 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தகவல். சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்று அதிகம் உள்ள இடங்கள் மாநகராட்சி அதிகாரிகளால் கண்டறியப்பட்டு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதையடுத்து அந்த இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது.
மேலும், தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 10 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திரு.வி.க.நகர் மண்டலத்தில் ஒரு இடமும், அம்பத்தூரில் 17 இடங்களும், அண்ணாநகரில் 16 பகுதிகள், தேனாம்பேட்டையில் 3 பகுதிகள், கோடம்பாக்கத்தில் 18 பகுதிகள் என மொத்தம் 54 பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.