புதுக்கோட்டை: ‘கொரோனாவிற்கு சித்தா, ஆயுர்வேதம் சிகிச்சை நல்ல பலனைத் தருகிறது’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுநீரக சிறப்பு சிகிச்சை மையத்தில் 300 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: அரசு உத்தரவை மீறி கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. இதில் பல மருத்துவமனைகள் அரசு விதிகளுக்கு உட்பட்டு கட்டண வசூல் செய்கின்றனர். ஆனால் இதுபோன்ற கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.