சென்னை : கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசியதால் ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள் குமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணா சிலையில் மர்ம நபர்கள் காவிக் கொடி கட்டியுள்ளனர். குழித்துறை 3 சாலை சந்திப்பில் அமைந்துள்ள முழு உருவ அண்ணா சிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் காவித்துண்டு கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுக மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த குழித்துறை போலீசார் அண்ணா சிலையில் கட்டி இருந்த காவி கொடியை அகற்றினர். இதனால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அண்ணா சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரி மாநிலம் வில்லியனுரில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலையின் கழுத்தில் காவி துண்டு கட்டியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.