மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து ஆக.3ல் முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்!

சென்னை:  புதிய கல்விக்கொள்கை குறித்து ஆகஸ்ட் 3ம் தேதி முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தவுள்ளார். இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்டக் குழு தேசியக் கல்விக் கொள்கை வரைவு -2019 அறிக்கையை கடந்த ஆண்டு மே 31ம் தேதி மத்திய அரசிடம் வழங்கியது. புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் உருவாகிய நிலையில், கடந்த ஜூன் 30ம் தேதி வரையில் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியது. கரோனா தொற்றுப் பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, கடந்த ஐந்து மாதங்களாக நாடே முடங்கி உள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில், 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும். 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிக்கப்படும். பள்ளிக்கு வராமல் இருக்கும் 2 கோடி குழந்தைகள் 2020-ம் ஆண்டுக்குள் பள்ளியில் சேர்க்க புதிய கல்வி கொள்கை வகை செய்கிறது. பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும்.

உயர் கல்வி நிறுவனங்களில் 2035-ம் ஆண்டுக்குள் மாணவர்கள் சேர்க்கையை 50 சதவீதம் அதிகரிக்கவும், புதிதாக 3½ கோடி இடங்களை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. மருத்துவம், சட்டம் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயர்கல்வியையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும். மருத்துவம், சட்டம் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயர்கல்வியையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும், உள்ளிட்ட பல அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து ஆகஸ்ட் 3ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கல்விக் கொள்கையின் சாதக, பாதங்கள் குறித்து அப்போது அலசப்ப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக்கு பிறகு புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: