திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார் (37). டிரைவர். இவரது மனைவி சுகாசினி (34). ராம்குமார், மனைவி, 13 வயது மகனுடன் திருப்பூர் போயம்பாளையம், மும்மூர்த்தி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சுகாசினி அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் மகனை தாராபுரத்தில் உள்ள தந்தை வீட்டில் விட்டிருந்தனர். நேற்று முன்தினம் சுகாசினி வேலைக்கு சென்றார். ராம்குமார் வீட்டில் இருந்தமார். அன்று மதியம் ராம்குமார் தாராபுரத்தில் உள்ள தந்தைக்கு போன் செய்து, ‘நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். எனது மகனை பார்த்துக்கொள்ளுங்கள்’ என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். பின்னர் வீட்டில் சீலிங் பேனில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.
இதனை வீடியோவாக தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேரலையாக ராம்குமார் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ராம்குமாரின் மனைவி சுகாசினிக்கு தகவல் தெரிவித்தனர். சுகாசினியும், நண்பர்களும் வீட்டுக்கு பதறியடித்தபடி சென்றனர். பூட்டி கிடந்த அறையை திறந்து பார்த்தபோது, ராம்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசார் ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்வதற்கு முன்பு ராம்குமார் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
அதில், ‘கேடுெகட்ட உலகமிது. இங்கு வாழ விருப்பமில்லை. யாரும் பீல் பண்ணாதீங்க’ என எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர். ‘பேஸ்புக்கில்’ நேரலையாக தற்கொலை வீடியோவை பதிவிட்டு டிரைவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.