சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து அங்குள்ள 800க்கும் மேற்பட்ட நோயாளிகள் உட்பட 1100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் முதற்கட்டமாக 600 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த முடிவுகளில் அங்குள்ள 7 நோயாளிகள், 2 மருத்துவ பட்டமேற்படிப்பு டாக்டர்கள் உட்பட 12 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக்கத்தில் 26 நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதில் நேற்று 22 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.