புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், என்னுடைய உடன்பாடு இல்லாமல் பட்ஜெட் உரை தயாரிப்பட்டிருக்கிறது. எனவே பட்ஜெட் கூட்டத்தொடரில் தான் பங்கேற்க முடியாது என்று நேற்று இரவு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிவித்திருந்தார். இருப்பினும் கிரண்பேடி வருகைக்காக சட்டப்பேரவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. சரியாக 9:30 மணிக்கு ஆளுநர் வருகை புரிவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிரண்பேடி வரவில்லை. இதனால், ஆளுநர் உரையை பேரவையில் ஒத்திவைப்பதற்காக வாக்கெடுப்பு நடைபெற்று நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவையை ஒத்திவைக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு தொடங்கியது.