சென்னை: சென்னையில் தற்போது 13,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தாலும் 1,200 பேருக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு முதலில் அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 83,377 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,376 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ரிப்பன் மாளிகையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் முன்பு 4,000 பரிசோதனை செய்தாலே 1,500 பேருக்கு பாசிட்டிவ் என்ற நிலை இருந்தது. தற்போது 13,000 பேருக்கு பரிசோதனை செய்தாலும் 1,200 பேருக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது. முதல்வர் உத்தரவு படி கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து வருகிறோம்.