அலங்காநல்லூர்: பாலமேடு பகுதியில் ஆடிபட்ட பயறு தானிய விதைப்பு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், பாலமேடு சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் பருவ மழையை தொடர்ந்து ஆடிப்பட்ட பயிர் தானிய விதைப்பு தொடங்கியுள்ளது. வருடம் தோறும் ஆடி மாதத்தில் பல்வேறு வகையான பயறு தானியங்களை விதைப்பது வழக்கம். ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கு அன்று உழவுப் பணிகள் தொடங்கி பலவகை தானியங்களை விவசாயிகள் விதைப்பு செய்வது பாரம்பரிய வழக்கமாக இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே பெய்த காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாமல் விவசாயம் பாதிப்பு காரணமாக வருவாய் இழந்த விவசாயிகள் தீவிரமாக உழவுப்பணி செய்து வருகின்றனர். அதில் நிலக்கடலை, மக்காச்சோளம், பாசிப்பயறு, உளுந்து, துவரை, மொச்சை உள்ளிட்ட பல்வேறு பயிர் தானியங்களை விதைப்பு செய்து வருகின்றனர்.