சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்தா மற்றும் யோகா சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்கள் தொடர்ந்து மூச்சுப் பயிற்சிகளை மேற்கொண்டால் நுரையீரலின் செயல்திறன் அதிகரித்து சுவாசப் பாதைகள் சீராகும். மேலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க எளிய முறையிலான சில ஆசனங்களும் வழிவகுக்கின்றன. இதை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் இடங்களுக்கே சென்று இப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.