சாலை விபத்தில் 2 குட்டிகள் பலியான சோகம் மனிதர்களுடன் இணைந்து தாய் நாய் குட்டிகளுக்கு இறுதி சடங்கு செய்த காட்சி

* விலங்குக்கும் வலி உண்டு என்று நிரூபித்த படம்

* கண்ணீர் வரவழைக்கும் வீடியோ

சென்னை: சாலை விபத்தில் இரண்டு குட்டிகளை இழந்து, தாய் நாய் தவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி நெஞ்சை உறைய வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி பார்ப்பவர்களின் கண்களில் தண்ணீரை வரவழைத்துள்ளன. அந்த வீடியோவில் இருப்பதாவது: நாய் ஒன்று தனது குட்டி நாய்களுடன் சாலையோரத்தில் உள்ளது. பிறந்து சில வாரங்களே ஆன குட்டிகளும் தாயுடன் இருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாலை வழியே வேகமாக சென்ற வாகனம் ஒன்று இரண்டு குட்டி நாய்களை அடித்து தூக்கி வீசியுள்ளது. இதில் குட்டிகள் துடிதுடித்து உயிரிழந்துள்ளன. இது தெரியாமல் தாய் நாய் குட்டிகளை தேடி சாலையில் சுற்றி திரிந்துள்ளது.  இந்த காட்சியை வாலிபர் ஒருவர் பார்த்துள்ளார். அவர், அழுகிய நிலையில் இறந்து கிடந்த குட்டிகளை எடுத்து, ஒரு குழிதோண்டி அதில் எடுத்துச்சென்று போடுகிறார்.

அப்போது தாய் நாய், வேகமாக அவர் பின்னாலே ஓடுகிறது. அடுத்து அந்த வாலிபர் தன் குட்டிகளை வைத்து என்ன செய்கிறார் என்று நின்று உற்றுபார்க்கிறது. குழியின் அருகே பெண் ஒருவர் குட்டி நாய்களின் உடல் புதைக்கப்படும் குழியில்  உப்புக்கொட்டி மண்ணால் மூடுகிறார். இதனை பார்த்த தாய் நாயும் மனிதர்கள் எப்படி செய்வார்களோ அதேபோல் தனது மூக்கால் மண்ணை குழிக்குள் தள்ளுகிறது. தனது இரண்டு கால்களாலும் மண்ணை அள்ளிப்போடுகிறது. அங்கே இருந்த இளைஞர்கள் புதைக்கும் வரை, தாய் நாயும் சேர்ந்து மண்ணை தனது மூக்கால் தள்ளி விடுகிறது. உடன் இருப்பவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல், அவர்கள் நமக்கு ஏதோ உதவி செய்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை பார்த்து கொண்டே இருக்கிறது.இந்த சம்பவம் அப்படியே வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் அனைவருமே சோகத்துக்கு சென்று விடுகின்றனர். இந்த காட்சிகளில் சாலைகளில் செல்லும் போது கவனமாக செல்லுங்கள், நாய்களுக்கும் உயிருண்டு.. உயிரின் வலி எல்லோருக்கும் ஒன்றுதான்.. என்பதை அந்த தாய் நாயின் பாசம் புரிய வைக்கிறது.

Related Stories: