பெரம்பூர்: சென்னை திருவிக நகர் மண்டலம் 70வது வார்டுக்கு உட்பட்ட ஸ்டேட் பாங்க் ஆபீசர்ஸ் காலனியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள முதல் தெருவில் கடந்த 10 நாட்களுக்கு முன், மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியது. இதுபற்றி அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த மழையில், கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலை கழிவுநீர் குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.