அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் வரை நீட்டிப்பு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!!

சென்னை:  அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு ஆகஸ்டு வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது மிகவும் அவசியம். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதனை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது.

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த 2017 - 2018ம் கல்வி ஆண்டு முதல் இலவச நீட் பயற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2019 - 2020ம் கல்வி ஆண்டுக்கான நீட் பயற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் 412 மையங்களில் நடத்தப்பட்டு வந்தன. வார இறுதி நாட்கள், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மட்டும் நீட் பயற்சி  வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

மொத்தம் 27 நாட்கள் மட்டுமே நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான செய்முறை தேர்வு தொடங்கியதையடுத்து நீட் பயிற்சி வகுப்புகள் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தப்பின்னும், நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதன்படி, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு Amphisoft Technologies நிறுவன இணையதளம் மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக வருகின்ற செப்டம்பர் 13ம் தேதிக்கு நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நீட் பயிற்சி வகுப்புகளும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: