சென்னை: நடிகர் விஷால் நடத்தி வரும் சினிமா தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் கணக்காளராக பணியாற்றி வந்த ரம்யா மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் விஷால் சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இவரது அலுவலகம் வடபழனி குமரன் காலனியில் உள்ளது. இவர் பல சினிமா படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் இவரது மேலாளர் ஹரி என்பவர் கடந்த 3ம் தேதி வடபழனி போலீஸ் உதவி கமிஷனர் ஆரோக்கியம் பிரகாசத்திடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், நடிகர் விஷால் சினிமா தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ஆண்டு கணக்குகள் சரிபாக்கப்பட்டது. அப்போது சிறுக சிறுக ரூ.45 லட்சம் வரை பணம் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே எங்களுக்கு கணக்கு வழக்குகளை கவனித்து வந்த பெண் ஊழியர் ரம்யா மீது சந்தேகம் உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும் என்று கூறியிருந்தார்.