தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகள் எத்தனை?..தமிழக உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு..!

மதுரை: தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகள் எத்தனை? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை, பலாத்காரம், உள்ளிட்டவற்றால் பாதித்த பழங்குடி, ஆதிதிராவிடர்களுக்கு 3 மாதத்தில் உரிய நிவாரணம் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் தடுப்புச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்டோரின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கொலையானவர்களின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, நிவாரண நிதி மட்டும் வழங்கியதாகவும், பிற நிவாரணங்களை வழங்கவில்லை எனத் தெரிவித்தனர். தமிழகத்தில் 2001 முதல் 2015 வரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 471 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 363 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோருக்கு சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை.

எனவே, தமிழகத்தில் 2001 முதல் 2017 வரை வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, கொலை வழக்கு பதியப்பட்ட வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் விதிகளின் அடிப்படையில் விவசாய நிலம்,வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு,  இதுவரை தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கொலை வழக்குகளாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை? என்பது குறித்தும் அவர்களில் எத்தனை குடும்பத்தினருக்கு விவசாய நிலம், அரசு வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்தும் தமிழக உள்துறைச் செயலர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: