தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கும் திட்டம்; வரும் 13ம் தேதி முதல் தொடக்கம் : அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு : தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும்

என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையம் நம்பியூரில் அரசு பள்ளியில் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய பின், அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை வரும் 13ம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைப்பார். பாடப்புத்தகங்களை வழங்கியவுடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும். அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு சேனல் என்று 5 தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் தோறும் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத 10ம் வகுப்பு மாணவர்கள் என மாவட்டத்திற்கு சிலர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் தேர்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வு தேதியை முதல்வர் இன்று மாலை வெளியிடுவார். பிளஸ் 2 மாணவர்கள் 34,482 பேர் கடைசி தேர்வை எழுதவில்லை. அதில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். தேர்வு முடிந்த 4 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பிளஸ் 1,பிளஸ் 2 பாடத் திட்டம் கடந்த ஆண்டு இருந்ததே தொடரும். என்றார்.

Related Stories: