பிரேசில் அதிபர் போல்சனாரோக்கு கொரோனா உறுதி; எனது நண்பர் விரைந்து குணமடைய பிராத்திகிறேன்...பிரதமர் மோடி டுவிட்

டெல்லி: பிரேசில் அதிபர் போல்சனாரோ கொரோனாவில் இருந்து குணமடைய பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில்  உள்ளது. அந்நாட்டில் சுமார் 16 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 66, 868 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால் அந்நாட்டின் அதிபர் போல்சனாரோ மாஸ்க் தேவையில்லை, சமூக இடைவெளி தேவையில்லை,  சுதந்திரமாக நடமாடுங்கள் என பிரசாரம் செய்தார். கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்தே போல்சனாரோ பல்வேறு நிகழ்ச்சிகளில் மாஸ்க் அணியாமலே பங்கேற்றார்.

இதனால் அந்நாட்டு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானார். இனியும் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் நீதிமன்றம் அவரை எச்சரித்தது. அதன்பிறகு அவர் மாஸ்க் அணிந்தாலும் அதை முறையாக அணியவில்லை என்ற  குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, கடந்த 3 நாட்களுக்கு முன் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதால், போல்சனாரோ கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதன் முடிவு நேற்று கிடைத்தது. இதில் அவருக்கு  கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை போல்சனாரோ தனது பேட்டியின் போது செய்தியாளர்களிடம் நேரடியாக தெரிவித்தார். தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரேசில் அதிபர் போல்சனாரோ குணமடைய பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி, எனது நண்பர் ஜனாதிபதி போல்சனாரோ கொரோனாவில் இருந்து  விரைந்து குணமடைய பிராத்திகிறேன் மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: