சென்னை: தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர் நலச்சங்க தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவருமான கத்திப்பாரா ஜெனார்த்தனன் (73), வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணிக்கு மாரடைப்பால் அவர் இறந்தார். தொடர்ந்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கிண்டி கத்திப்பாரா அருகில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன், தென்சென்னை வடக்கு மாவட்ட தமாகா தலைவர் சைதை மனோகரன், பொருளாளர் கிண்டி மம்மு, பகுதி தலைவர்கள் கோயில் பாஸ்கர், ஆலந்தூர் பாஸ்கரன், இளம்புயல் சுரேஷ், இருதயராஜ் உள்ளிட்ட கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.