ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வரும் 15க்குள் வகுக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் மத்தியஅரசு உத்தரவாதம்

சென்னை: ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஜூலை 15ம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவர்களின் கவனம் சிதைய வாய்ப்பு ஏற்படும். அதனால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி சென்னை புத்தகரத்தை சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல, ஆன்லைன் வகுப்புகளை மொபைல் மூலமும், லேப் டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரி வக்கீல் விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் மற்றும் ஜெ.ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். அப்போது அவர்கள்,  ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டபடி அரசு கண் மருத்துவமனை டீன் எந்த ஒரு அறிக்கையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை என்றனர். அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்  சங்கரநாராயணன் வருகிற ஜூலை 15ம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.அதுவரை விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 20ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அப்போது, மனுதாரர்கள் தரப்பில் அதுவரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

Related Stories: