திருத்தணி: தமிழக, ஆந்திர எல்லையில் உள்ள நகரி அருகே சத்திரவாடா கிராமம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன் (25). இவர் ஆக்டிங் டிரைவர். இவரும் திருத்தணி அருகே பாப்பிரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் சூர்யா (20) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு நகரியில் இருந்து பாப்பிரெட்டி பள்ளிக்கு பைக்கில் சென்றனர். சென்னை, திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் டிவி.புரம் அருகே வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி, திடீரென பிரேக் பிடித்ததால் தடுமாற்றம் அடைந்த அவர்களின் பைக், லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரகுநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சூர்யா, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தகவலறிந்த திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகுநாதன் சடலத்தை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.