ஒடுக்கப்பட்டோர் உரிமைப் போராளி இரட்டைமலை சீனிவாசனின் புகழ் போற்றுவோம்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: ஒடுக்கப்பட்டோர் உரிமைப் போராளி இரட்டைமலை சீனிவாசனின் புகழ் போற்றுவோம் என்று திமுக தலைவர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அறிவுப் புலமையும் சளைக்காத போராட்டக் குணமும் கொண்ட தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாள் ஜூலை 7(இன்று). ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டு, லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கருடன் பங்கேற்று, பட்டியல் இன மக்களுக்கான தனித் தொகுதியை ஆங்கிலேய ஆட்சியரிடம் வலியுறுத்தியவர் இரட்டைமலை சீனிவாசன்.

திராவிட இயக்க முன்னோடித் தலைவர்களுடன் அவர் கொண்டிருந்த நட்புறவு, ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்குத் துணை நின்றது. பொது இடங்களில் பட்டியல் இன மக்கள் நடமாடுவதற்கு இருந்த சமூகத் தடைக்கு எதிராக

சென்னை மாகாண சட்டமன்றத்தில் இரட்டைமலை சீனிவாசன் எழுப்பிய குரலும், அதன் விளைவாக நீதிக்கட்சி ஆட்சியில்  பொதுக்குளம் - கிணறு - தெரு என அனைத்தையும் பட்டியல் இன மக்கள் பயன்படுத்துவதற்கான உரிமை வழங்கப்பட்டு, அதனைத் தடுப்போருக்கு எதிரான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஒடுக்கப்பட்ட சமூகத்தாரை இழிசொற்களால் அழைக்கப்படுவதையும் பத்திரப்பதிவுவரை அது தொடர்வதையும் சுட்டிக்காட்டி, ஆதிதிராவிடர் என அழைக்கவும் - பதிவு செய்யவும் நீதிக்கட்சி ஆட்சியில் வழி செய்தவர் இரட்டைமலை சீனிவாசன். 2000ம் ஆண்டு, திமுக பங்கேற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தலைவர் கலைஞரின் முயற்சியால் இரட்டைமலை சீனிவாசனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து, அவரது புகழினைப் போற்றி, ஒடுக்கப்பட்டோர் உரிமைக்குக் கழகம் என்றும் துணை நிற்கும் என உறுதியேற்போம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திராவிட இயக்க முன்னோடித் தலைவர்களுடன் அவர் கொண்டிருந்த நட்புறவு, ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்குத் துணை நின்றது.

Related Stories: