தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்படுவதற்கு முன்னர் ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பி செல்ல பயன்படுத்திய களவாடப்பட்ட கார் பிடிபட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சித்ரவதை செய்து கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ராகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் இரவோடு இரவாக மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி காவல்துறை ஐ.ஜி. சங்கர் சிறையில் உள்ள 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறினார். தந்தை, மகன் கொலை தொடர்பாக காவல்துறை நண்பர்கள் குழுவை சேர்ந்த 10 பேர் உட்பட 20 பேரிடம் தூத்துக்குடியில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பி செல்ல பயன்படுத்திய களவாடப்பட்ட கார், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே பிடிபட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரான காரின் உரிமையாளர் சுரேஷ் குமார் 2 ஆண்டுக்கு முன் காணாமல் போன தமது வாகனத்தின் ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.