மீஞ்சூர் அருகே அதிமுக செயலாளர் வெட்டிக் கொலை: தொழில் போட்டியா என விசாரணை

சென்னை: அதிமுக கிளைச் செயலாளர் சிலம்பரசனை வெட்டிக் கொலை செய்த கும்பலை காட்டூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (35). வாயலூர் ஊராட்சி மன்ற அதிமுக கிளை கழக செயலாளர். அனல்மின் நிலைய பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை எடுத்து வேலை செய்து வந்தார். ஊரணம்பேடு பகுதியில் தனது ஒப்பந்தப் பணிகளை பார்வையிட நேற்று காரில் சென்றார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. சிலம்பரசனை சரமாரியாக வெட்டினர்.

அவர் அலறித் துடித்தார். கம்பெனியில் இருந்த காவலாளி ஓடி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். காவலாளி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிலம்பரசனை மீட்டு சிகிச்சைக்காக மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிலம்பரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனைத்தொடர்ந்து காட்டூர் போலீசார் சிலம்பரசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொழில் போட்டியால் கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என காட்டூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிலம்பரசனுக்கு பவித்ரா என்ற மனைவியும் ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர்.

Related Stories: