நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி. அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில், அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், வெடிவிபத்தை தொடர்ந்து என்.எல்.சி. அனல்மின் நிலைய பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக, என்.எல்.சி. கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி ஐவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.